எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Wednesday, June 17, 2009


கேள்வி : கிழமைக்கு அறுநாளென கொண்டதற்கு ஆதாரம் என்ன?

பதில் : சூரியர் -சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் மற்ற கோள்களுக்கு இரு மண்டலங்களும் உள்ளதே உரிய சான்றாகும்.

கேள்வி : எழு நாட்களை அறு நாட்களாக கொள்ளின் நீக்கப் படும் கிழமை -மண்டலம் எது?

பதில் : எம்மண்டலத்தையும் நீக்க வேண்டிய தில்லை ; முன் வரும் முப்பது நாழிகை சூரியனுக்கும் பின் வரும் முப்பது நாழிகை சந்திரனுக்கும் என இருவருக்கும் ஒரு நாளை அரை, அரை நாளாக கொண்டுவிடின்.

கேள்வி : தேசம், தேசியம் என்னும் இரு சொற்களும் தமிழ்ச்சொல்லாக தெரிய வில்லை இது குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில் : தேசம், தேசியம் என்னும் இரு சொற்களும் தமிழ்ச் சொல்லின் திரிபுகளாகும்; தேஎம்> தேயெம்>தேயம்> தேசம் என்பது வே இதன் வரலாறு ஆகும். வாயில்>வாயல்> வாசல் என வழங்கும் மற்றொரு வழக்கும் என் கூற்றை உறுதிப்படுத்தும் தன்மையில் உள்ளதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. தேசியம் என்னும் சொல் தேசம் என்னும் சொல்லிலிருந்து கிளைத்த சொல்லாகும்.

கேள்வி : திராவிடம் என்னும் பெயர்ச் சொல் வழங்கும் தன்மையினைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : திரிபுர என்னும் சொல் லே திராவிடம் என திரிந்து வழங்குகிறது. திரிபுரம் >திரிவிடம்> திரவிடம் என்பது இதன் வரலாறு ஆகும். திரிபுரம்-திரிவிடம்- திரவிடம் -திராவிடம் -மூவிடம்- மூவரண்- மூவெயில்- மூவுலகு என்பன யாவும் ஒருபொருள் குறித்த பல சொற்கள்ஆகும் ..

கேள்வி; பழந் தமிழர்களின் கணியக் கோட்பாட்டில் முதல் இராசி மண்டலம் எது?

பதில்: சிம்மம் ஆகும்.

கேள்வி: முப்பத்து முக்கோடி தேவர்கள் என புராணங்கள் உரைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முப்பது முக்குறை கோடி என்னும் தொடரே முப்பத்து முக்கோடி என இடைக்குறை கண்டு வழக்கில் நிலைபெற்றுள்ளது. முப்பதில் மூன்று குறைந்த இருபத்தேழு என்பது மேல் இடம் பெற்றுள்ள தொடரின் பொருளாகும். இருபத்தேழு என்னும் எண்ணுத் தொகை கணிய நூலில் இடம்பெறும் விண்மீன்களின் தொகுதிப் பெயராகும்.

கேள்வி : நாற்பத்தெட்டாயிரம் இருடிகள் என்றால் யாரைக் குறிக்கும்?

பதில் : நான்கு- எட்டு என்னும் எண்ணுப் பெயர்களை பிரித்துப் படிக்காது நாற்பத்தெட்டு என தொகுத்துப் படித்த காரணத்தால் ஏற்பட்ட வழு வழக்கு வழக்கில் நிலைபெற்றுவிட்டது. நான்கும் +எட்டும் = பன்னிரண்டுஎன்னும் கூட்டுத்தொகை வான மண்டலத்தின் பகுப்பாகும் என்பதை நான் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன்.


கேள்வி: சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரினில் நாளும் நானிலத்தை வலம் வருகிறான் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : பகலவன் எழுநிற கதிர்கள் புடை சூழ நாளும் வலம் வருவதனையே ஏழு குதிரையென உருவகப் படுத்தி உரைத்தனர். இதனை உண்மையென நம்பி வாழ்ந்த காலமும் உண்டு . இன்று அந்நிலை மாறி வருகின்றன.

" எழுநிறப் பரிகளை தேரினிற் பூட்டி
எழுந்திடும் பரிதியின் திருமுக முன்னே
பச்சரிசி தன்னை பானையி லிட்டு
எச்ச மின்றி இன்சுவை கலந்து
மனைதோறும் பொங்கலோ பொங்க லென்று
மனைதனில் மங்கையர் பொங்கிடும் முறையில்
காரிருள் போக்கும் கதிரோ னெழுமுன்
கருக்கலி லெழுந்து கழனியை வுழுது
காற்றிலும் மழையிலும் கண்ணயர் வின்றி
சேற்றினி லுழைத்து செந்நெல் விளைத்து
உலகோர் பசியினை அயராது தணிக்கும்
உலகியப் பொங்கல் திருநாள் வாழிய"

எனும் பா ஒன்றினை 1972-ல் புரட்சிக் குரல் என்னும் எழுச்சி இதழில் படைத்தமை கொண்டு தாங்கள் நான் உரைத்த கருத்து நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என்பதை உணரலாம்.

No comments:

Post a Comment